காஷ்மீரில் என்னதான் பிரச்னை? ஏன் எப்பொழுதுமே பதற்றமாக காணப்படுகிறது (காட்டப்படுகிறது)?

முன்னுரை:
இயற்கை எழில் கொஞ்சும் வனமாக இருந்த காஷ்மீர், இன்றுவரை ஒரு பரபரப்பான இடமாகவே  இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் கருதப்பட்டு வருகிறது.
அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பொதுமக்களும் பல்வேறு குழப்பங்களால் திணறி வருகின்றனர்.
இதனை கைப்பற்ற இரு நாடுகளும் 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் போர் புரிந்துள்ளன. ஆனால் அந்த சமயங்களில் ஐநா மன்றம் உள்புகுந்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படாமல் பல உயிர்கள் போய்க்கொண்டிருப்பதும் தொடர்ந்த வண்ணமாகவே இருந்து வருகிறது.


காஷ்மீர் பற்றிய வரலாறு:
காஷ்மீர் இந்தியாவுடையது என நினைத்துக்கொண்டிருந்தால் அது தான் மிகப்பெரிய தவறு. காஷ்மீர் இரு நாடுகளுக்கும் சொந்தமான ஒன்று கிடையாது. 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்கிற கட்சியானது, அதன் தலைவர் ஷேக் அப்துல்லாவால், காஷ்மீர் தனி நடக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

காஷ்மீரில் முஸ்லிம் மக்கள் அதிகம் என்பதால் மத உணர்வை தூண்டிய மக்களிடம் செல்வாக்கு தேடிய இந்த கட்சி அதன் பின்னர், மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்துள்ளது. பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இருந்து 1947 ஆகஸ்ட் 15-இல் சுதந்திரம் வாங்கிய பின்னர், இந்தியா- பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.

அப்போது பிரித்தானிய ஒரு சூழ்ச்சி நிறைந்த தந்திரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்து கொள்வார்கள் என வெளியானது.

அதன்படி, இருநாடுகள் பிரிந்தாலும் காஷ்மீர் யாருடனும் சேரப்போவதில்லை என்பதில் உறுதியாக, தனிநாடாக இருக்க போகிறது என்கிற அறிவிப்பினை காஷ்மீர் மாநிலத்தை ஆண்ட மன்னர் ஹரிசிங் வெளியிட்டார். இந்து மன்னராகிய ஹரிசிங் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள செல்வாக்கு மிகுந்த மனிதர்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக 1947-ல் அக்டோபர் 22-ம் திகதி முதன்முறையாக பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து கைப்பற்றும் வேளைகளில் ஈடுபட ஆரம்பித்தன. சிறிய படைபலத்தை மட்டுமே கொண்டிருந்த காஷ்மீரால், இதனை எதிர்க்க முடியவில்லை. வேகமாக முன்னேறிய பாகிஸ்தான் படைகள் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் ஸ்ரீநகரை தன்வசப்படுத்தியது.

இதனையடுத்து மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினர். அதன்படி இடைக்கால இணைப்பு என்னும் பத்திரத்தில் கையொப்பமிடப்பட்டது. 1947 அக்டோபர் 26-இல் ஷேக் அப்துல்லா ஒப்புக்கொண்டபின் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். உடனடியாக செயல்பட்ட இந்திய படைகள் பாகிஸ்தானை பின்னோக்கி விரட்டி ஸ்ரீநகரை முழுவதும் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தது.

இடைக்காலமாக இணைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்றினையும் இந்திய கவனித்து கொண்டிருந்தது.

மேலும் அந்த ஒப்பந்தத்தில் மவுண்ட் பேட்டனின் ஆலோசனைப்படி ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. அது என்னவெனில், “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதாகவும்.


இந்த சமயத்தில் ஐநாவின் உதவியை இந்தியா நாடியதால் பேச்சு வார்த்தையின் மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
“காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதனை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இன்றுவரை அதற்கான வாக்கெடுப்பினை நடத்தாமல் இரு நாடுகளும் பங்கு போடுவதில் குறியாக இருந்து வருகின்றனர்.


இதற்கிடையில் சிக்கிக்கொண்டு காஷ்மீர் மக்கள் தினம்தோறும் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையினை வெறுத்தே ஒரு கட்டத்தில் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதாகவும் ஒரு கூற்று இருந்து வருகிறது.

Comments