தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்! பாகம் - 1

 பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலான ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை முடங்கிக் கிடப்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஆய்வாளர்கள். ‘ பத்து ஆண்டுகளாக ஆய்வு அறிக்கை முடங்கிக் கிடப்பதில் பல மர்மங்கள் உள்ளன. தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது” என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.




சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் கண்டறியப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் வெளியானதில், தமிழ் உணர்வாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கீழடி ஆய்வுக்குரிய 2 ஏக்கர் நிலம் ஒதுக்காதது; ஆய்வுக் குழிகளை மூட முற்படுவது எனப் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நீதிமன்றத்தின் கவனத்துக்கும் வழக்கு சென்றது. இந்நிலையில், ஆதிச்சநல்லூர் குறித்து வெளியாகும் தகவல்களால் ஆய்வாளர்கள் மத்தியில் பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ” 1904-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிதான், இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆராய்ச்சி. அதன்பிறகே, 1924-ம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதி மற்றும் அரிக்கமேடு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டன.

மத்திய தொல்லியல் துறை; மத்திய தொல்லியல் துறையின் அனுமதியோடு, 2004-ம் ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது வரையில் நான்கு தொகுதிகளாக இருக்கும், இந்த ஆய்வு முறைகளை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளனர்” என வேதனையோடு தொடங்கினார் தொல்லியல் அறிஞர் ஒருவர். அவர் நம்மிடம், “தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதி, தமிழர்களின் கடல்கடந்த வாணிபத் தொடர்புகள், திருமண முறைகள், தனித்தனி இடுகாடுகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மிக முக்கியமான ஆவணங்கள் இங்கு கிடைத்துள்ளன.

இந்தப் பணியில் ஈடுபட்ட மானுடவியல் அறிஞர் ராகவன், ஆய்வறிக்கைகளை மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆனால், ஆய்வு அறிக்கையை வெளியிடுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை. தொடக்கத்தில், மண்டை ஓடுகள் குறித்த ஆய்வறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்கள். ‘ இந்தப் பணியில் இரண்டரை ஆண்டுகளாக எந்தப் பணமும் வாங்காமல் பணி செய்கிறேன். ஆய்வின் மூன்று பாகங்களை தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்த மகேஸ்வரிக்கு 2013-ம் ஆண்டிலேயே அனுப்பிவிட்டேன்’ என மானுடவியல் அறிஞர் ராகவன் தெரிவித்தார்.

‘அந்த மூன்று பகுதி ஆய்வறிக்கைகளும் அச்சாகிக் கொண்டிருப்பதால், விரைவில் வெளியிடப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணியில் அனைவரையும் ஊக்கப்படுத்தி, வேலை வாங்கிக் கொண்டிருந்தார் மகேஸ்வரி. அவரையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். இந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை முடக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இப்போது நான்காவது பகுதி அறிக்கையை மறைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டால் மட்டுமே, ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை காப்பாற்ற முடியும்” என ஆதங்கப்பட்டார்.

” ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டது. சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சோகார் ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருட்களை பெர்லின் அருங்காட்சியத்தில் வைத்தார். இதற்கு ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்’ என்றே பெயர் வைத்தார். 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா நடத்திய ஆய்வில், ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. கூடவே, மண்பாண்டங்கள், ஈட்டி, கோடாரி, வாள், கத்தி உள்ளிட்டவைகளும் கிடைத்தன. இவற்றை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்தனர். அதன் பின்பு தொல்லியல் துறை, தீவிர ஆய்வுகளை மேற்கொண்டது. 114 ஏக்கரில் நிலத்தைத் தோண்டி நடத்தப்பட்ட ஆய்வில், பல பொருட்கள் கிடைத்தன. இந்த ஆய்வுக் குறிப்புகளைத்தான் வெளியிடாமல், அதிகாரிகள் மறைக்கின்றனர். இதற்குப் பின்னால் மத்திய தொல்லியில் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தால், மத்திய தொல்லியல் துறையின் உறக்கம் கலையும். தமிழர்களின் வரலாறும் மாறும்” என்கிறார் அருங்காட்சிய காப்பாட்சியர் ஒருவர்.

சென்னை, தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரிடம் பேசியபோது, ” ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கைகளை அச்சிடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அவற்றை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஒருவர், வெளிநாட்டில் இருந்ததால் சில பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. விரைவில் ஆய்வு அறிக்கை வெளியாகும்” என்றார்.



ஆதிச்சநல்லூர் வரலாறு; திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்சநல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆதிச்சநல்லூர் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.


1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும். 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார். இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். ”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

Comments